திரைப்படம் என்னும் இவ்வூடகம் எப்போதும் புதியவற்றை, புதிய சிந்தனையை, புதிய முயற்சியை, புதிய இசையைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு வெற்றியாளனாக இருக்க விரும்பினால், புதிய முயற்சிகளுக்குத் தயங்காதவராக இருக்கவேண்டும். நம் கடந்த காலத்தை அறிந்துக்கொள்ள நினைப்பது வருங்காலத்தை வடிவமைக்க அது உதவுமென்பதனால்தான். ஒளிப்பதிவுத்துறையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தலைசிறந்து விளங்கும், ஒளிப்பதிவாளர் திரு.அனில் மேத்தாவை விட தகுதியானவரை நாம் கண்டுவிட முடியாது, அவர் ‘யதார்த்தம்’ (realism) பற்றி பேசினால், நாம் கவனிக்கத்தான் வேண்டும். திரு.சுப்ரதோ மித்ரா மற்றும் திரு.வி.கே.மூர்த்தி என்ற இந்தியாவின் இரண்டு மாபெரும் ஒளிப்பதிவாளர்களின் அழகியல், யதார்த்த ஒளியமைப்பு, நுட்பம் மற்றும் அற்புதமான காட்சிமொழி பற்றிய ஒப்பீடு, ஒவ்வொரு திரைப்பட மாணவனுக்கும் முக்கியத்துவமானதாகும்.
திரு.பன்னீர் செல்வம், திரு.முருகன் மற்றும் திரு.ஜகதீசன் கண்ணா ஆகியோரின் முயற்சியில் எழுதப்பட்ட இம்மொழிபெயர்ப்புக் கட்டுரை உங்களுக்காகவே!
Enjoy the article.
– ராஜீவ் மேனன்
கொஞ்சம் லெஃப்ட் கொஞ்சம் ரைட் – அனில் மேத்தா
8-வது, சர்வதேசத் திரைப்பட விழா பெங்களுரில் நடைபெற்ற பொழுது, திரு.வி.கே.மூர்த்தியின் நினைவுரையின் ஒரு பகுதியாக ‘யதார்த்த சினிமாவின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புரையாற்றினார் பிரபல ஒளிப்பதிவாளர் திரு.அனில் மேத்தா அவர்கள், அதன் சாராம்சமே இத்தொகுப்பு.
உங்கள் வருகைக்கு நன்றி, இந்த வாய்ப்புக்கும் நன்றி, என்னைப் பொருத்தவரை ஓர் ஒளிப்பதிவாளரை சிறப்புரையாற்றச் சொல்வது சரியான யோசனையாய் தோன்றவில்லை. ஓர் ஒளிப்பதிவாளருக்கு, வார்த்தைகளைக் கொண்டு ‘கலையின் தன்மையை’ நினைவுகூர்வது என்பது, அவரின் வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் எதிர்மறையானது. நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தாண்டி, பேசச்சொல்வது ஓர் ஒளிப்பதிவாளருக்கு சற்று கடினமானதே.
பொதுவாக ஓர் ஒளிப்பதிவாளர், தனக்குக் கொடுக்கப்பட்ட ‘கதையை, திரைக்கதையை, வார்த்தைகளை’ படிப்பதன் மூலம் மனதில் தூண்டப்படும் காட்சியை, பிம்பத்தை எப்படி படம் பிடிப்பது என்பதைப்பற்றி யோசிக்கிறார். பிறகு இயக்குநரோடு விவாதித்து அத்திரைப்படத்தின் ‘look and feel’-ஐ நிர்ணயிக்க முற்படும் பொழுது, எண்ணற்ற வார்த்தைகள் முன் வந்து நிற்கும்.‘Real-Very Real’ ‘Ethereal’ ‘Surreal’ ‘Gritty’ ‘Grungy’ ‘Glam’ ‘Edgy-Dark’ போன்றனவாக அவை, பல்நோக்கு கொண்டு நிற்கும்.
அச்சூழலில் ஓர் ஒளிப்பதிவாளரின் மனம், நிறைய எண்ண ஓட்டங்களும், செயல்முறை திட்டங்களுமாக நிரம்பி வழியும்.
உதாரணமாக, one stop under exposure and push process, 50% Bleach By pass, only long lenses on this one, 40 mm and above, 1/4 black promist ctb, T2.8 to 1.4 என்பதாக அவை விரியும். இவ்வார்த்தைகளும், இதன் தேவைகளும் மற்றவர்களுக்கு புரிவது சிரமம். அவ்வளவு முக்கியமானதாகவும் தோன்றாது. ஆனால், இது ஒரு ஒளிப்பதிவாளரின் செயல்முறை – கலை வடிவம் – உணர்வு – வார்த்தைகளை காட்சிமொழியாக உருமாற்றும் முறை.
இதைப்பற்றிப் பேசும் ஒரு மனிதரையா நீங்கள் இங்கே எதிர்பார்த்தீர்கள்.?
முதலில் திரு.பாஸ்கர் அவர்கள் என்னை கேட்ட பொழுது என்னால் மறுக்க முடியவில்லை. பாஸ்கர் என் துறை சார்ந்த முன்னோடி என்பதையும் தாண்டி, அவர் எனக்கு ஒரு வழிகாட்டியுமாவார். மேலும் திரைத்துறையில் வேறு யாரும் ஒளிப்பதிவாளர் பற்றியோ, ஒளிப்பதிவைப் பற்றியோ பேச முன்வராதபோது இப்பணியை நானே செய்யும் சூழல் ஏற்ப்பட்டது. இது நம்மை பற்றி நாமே உரக்க பேசிக்கொள்ளும் நேரம்.
ஒளிப்பதிவு என்பதை ஒரு கலையெனவும், வரையறுக்கப்பட்ட நுட்பமெனவும், கடினமான திறனெனவும் எல்லோரும் அங்கீகரிக்கிறார்கள். ஒவ்வொரு ஒளிப்பதிவாளனும் தன் கலையை தன்னுடைய ஆளுமையின் பாதிப்பிலிருந்தே படைக்கிறான்.
என்னுடைய சிந்தனைகள் வார்த்தைகளாக வடிவமாகும் பொழுது, ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய பார்வையில், ஒரு ஒளிப்பதிவாளரை நான் கண்டு வியந்த, ரசித்த, அவர் படைப்புகளில் மிளிர்ந்த யதார்த்தப் பதிவுகளைப் (REALISM) பற்றி, என் புரிதலை ஆதாரமாகக் கொண்டு பேச விரும்புகிறேன்.
அதில் மிகவும் என்னை பாதித்தவர் திரு.சுப்ரதோ மித்ரா (Subratha Mitra) அவர்கள். நான் FTII மாணவனாக இருந்த போது, எங்களுக்கு அவரோடு ’தொழில் நுட்பத்திறனை’ப் பற்றிய ஒரு கலந்துரையாடலை நிகழ்த்த ஒரு வாய்ப்புக் கிட்டியது. அது எங்களை மேம்படுத்திய ஓர் அழகிய நிகழ்வு. சுப்ரதோ மித்ரா அமைதியானவர் மட்டுமல்ல, செய்நேர்த்தியை முழுமையாக விரும்பக்கூடியவருமாவார். அவர் தன் சுய தேடல் மூலம் கற்றுத் தேர்ந்தவர். ஒளிப்பதிவின் நுட்பங்களான Sensitometry, Emulsion Architecture, Lab chemistry, Optics – போன்ற ஒளி அறிவியலை கற்றுத் தேர்ந்தவர்.
“சுப்ரதோ மித்ரா, என் பார்வையில், தனித்துவம் வாய்ந்த ஒரு யதார்த்தவாதி”
அவர் எங்களுடன் பேச முனையும் போது அவருடைய படமான ‘பதேர் பாஞ்சலியில்’ இருந்து தொடங்கமாட்டார், மாறாக Gray cards, Exposure Wedge, Plot the H&D curve, Determine Gama, Determine ISO போன்ற செயல்பாடுகளை விளக்கிப் புரியவைப்பார். அவருடைய முறை கடினமானதாக இருந்தாலும் அந்த அடித்தளம் இன்று வரை உறுதியாக உள்ளது.
1964-இல் சாருலதா திரைப்படத்தை, ஒரு மாணவனாக நான் பார்த்த பொழுது ஒரு ஒளிப்பதிவாளராக யாதார்த்தப் பதிவை அவர் மிகவும் நேர்த்தியாக செய்திருப்பதை உணர முடிந்தது, ஒரு ஒளிப்பதிவாளனின் இடத்தை அது புரியவைத்தது. ‘Indoor to Outdoor’, Set to Location என எல்லாவிதமான மாற்றங்களும் சிறிதும் நேர்த்தி குறையாமல், பிரமிப்பாகவே இருந்தது.
சாருலதாவின் பெரும் பகுதி அரங்குக்குள் படமாக்கப்பட்டது. இப்பொழுது பிரபலமாக இருக்கும், ‘பவுன்ஸ் லைட்டிங்’ (Bounce Lighting) முதன்முறையாக அவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.